ஹஜ் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள வாழ்த்து செய்தி
By: Nagaraj Thu, 29 June 2023 7:47:29 PM
கொழும்பு: ஜனாதிபதி தகவல்... மிகவும் கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, புதிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்திற்காக நாம் முயற்சிக்கும் தற்போதைய நிலையில், 2023 ஆம் ஆண்டு ஹஜ் பண்டிகை முன்னெப்போதையும் விட எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹஜ் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்களை சிரமத்தில் இருந்து மீட்பதற்கு எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் முன்வந்து அதற்கு தீர்வு காணும் மனிதாபிமான பணியில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் திருப்தியையும் ஹஜ் பண்டிகை பிரதிபலிக்கிறது.
அண்மைக் காலங்களில் இலங்கை இவ்வாறானதொரு கடினமான சூழ்நிலைக்கு முகங்கொடுத்தது. அந்தக் கஷ்டங்களைச் சமாளித்து நாட்டை தற்போதைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு மக்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை ஆகியவை மிகவும் சாதகமான காரணங்களாக அமைந்தன.
நீங்கள் செய்த தியாகத்தை நினைவு கூர்வதற்கும் கடந்த வரலாற்றுக்கால முக்கியமான தருணத்தை நினைவுபடுத்துவதற்கும் ஹஜ் பண்டிகை மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாக நான் கருதுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஹஜ் பண்டிகையின் போது பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களில் இருந்து முழுமையாக விடுபட அனைவரின் பங்களிப்பும், பங்கேற்பும் மிகவும் முக்கியமானது. பிராந்திய மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தில் கைகோர்க்க ஹஜ் பண்டிகையின் போது உங்களை அழைக்கிறேன்.