சனோபி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தடுப்பூசி தயாரிக்கும் ஜிஎஸ்கே நிறுவனம்!
By: Monisha Fri, 12 June 2020 09:47:30 AM
கொரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர். ஆனால் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளுக்கு கடும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் உலகின் மிகப் பெரிய தடுப்பூசி மருந்து தயாரிக்கும் ஜிஎஸ்கே நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. சனோபி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. மேலும், 2021-ம் ஆண்டு ஜூன் வாக்கில் 100 கோடி தடுப்பு ஊசிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஜிஎஸ்கே நிறுவனத்தின் மிகச் சிறந்த நுட்பம் அட்ஜுவன்ட் பிளாட்பார்மாகும். சனோபி நிறுவனம் புரதம் சார்ந்த எதிர்ப்பு மருந்து தயாரிப்பில் பிரபலமான நிறுவனமாகும். இந்த 2 நிறுவனங்களும் ஒன்றிணைந்து அடுத்த 15 முதல் 18 மாதங்களுக்கு 100 கோடி தடுப்பூசி மருந்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளன.
சர்வதேச அளவில் 9 ஆலைகளில் 100 கோடி தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க முடியும் என்று இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி ஒரு நாளைக்கு 20 லட்சம் தடுப்பூசிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளன.