- வீடு›
- செய்திகள்›
- மகாராஷ்டிராவில் 6 மாதங்களுக்கு பிறகு உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறை - உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவில் 6 மாதங்களுக்கு பிறகு உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறை - உத்தவ் தாக்கரே
By: Karunakaran Tue, 29 Sept 2020 3:24:25 PM
கொரோனா காரணமாக உணவகங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த மார்ச் இறுதி முதல் மாநிலம் முழுவதும் உணவகங்கள் வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல் மூடியே கிடக்கின்றன. பார்சல், ஆன்லைன் மூலம் மட்டுமே உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஓட்டல், உணவக உரிமையாளர்கள் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தனர்.
இதனால் வாடிக்கையாளர்களை உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்து நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலமாக மும்பை, புனே, அவுரங்காபாத், நாக்பூர் பகுதி உணவக சங்க பிரதிநிதிகளுடன் பேசினார். அப்போது, உணவகங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி உள்ளது என்று கூறினார்.
உத்தவ் தாக்கரே கூறுகையில், வழிகாட்டு நெறிமுறைகள் இறுதி செய்யப்பட்டபின் உணவகங்களை திறப்பது தொடர்பான முடிவு வெளியிடப்படும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளால் உணவகங்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது. உணவக சமையல்காரர்கள் மற்ற ஊழியர்களின் உடல்நலனை பார்த்து கொள்வது மிகவும் முக்கியமாகும். அவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, கைகளை அடிக்கடி சுத்தம் செய்து பாதுகாப்பையும், உணவக தூய்மையையும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
மராட்டியத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 30-ந் தேதியுடன் முடிவடையவுள்ளது. முதல்-மந்திரி வழிகாட்டு நெறிமுறை தயாராக இருப்பதாக கூறியதால், அடுத்த மாத முதல் வாரத்தில் உணவகங்கள், கேண்டின்கள், உணவு விடுதிகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 6 மாதத்திற்கு பிறகு மராட்டியத்தில் உணவகங்கள் திறக்கப்படவுள்ளது.