புலிகள் கணக்கெடுப்பு சாதனையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய புலிகள்
By: Karunakaran Sun, 12 July 2020 7:54:09 PM
இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்திய வன உயிரின நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு, இந்த கணக்கெடுப்பை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பு 2018-ன் 4-வது சுற்று முடிவுகளை கடந்த ஆண்டு சர்வதேசப் புலிகள் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியாவில் மொத்தம் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பதாக இந்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
இது உலகில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன. இதன் மூலம் உலகிலே அதிகம் புலிகள் கொண்ட நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு கேமரா மூலம் நடத்தப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு உலகின் மிகப்பெரிய வன உயிரினக் கணக்கெடுப்பாக தற்போது உலக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இந்திய புலிகள் கணக்கெடுப்பு இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளதை பிரதமர் மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.