ஊரடங்கை மீறிய குஜராத் மந்திரியின் மகனை கைது செய்த பெண் போலீஸ் திடீரென ராஜினாமா
By: Karunakaran Fri, 17 July 2020 1:37:03 PM
குஜராத் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரியாக குமார் கனானி உள்ளார். இவரது மகன் ராஜேஷ் கனானி. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சூரத் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஊரடங்கை மீறி மந்திரியின் மகன் மற்றும் அவரது 2 நண்பர்கள் சுற்றித்திரிந்துள்ளனர்.
ஊரடங்கின் போது, ரோந்துப்பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு சுனிதா யாதவ் அவர்களை மடக்கி மந்திரியின் மகன் என்றும் பாராமல் கண்டித்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதன்பின் மந்திரியின் மகன் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுதலையானார்கள்.
மந்திரியின் மகன் என்றும் பாராமல் துணிச்சலாக நடவடிக்கை எடுத்த சுனிதா யாதவ்வை சமூகவலைத்தளங்களில் மக்கள் பாராட்டினர். சட்டமன்றத்தேர்தலில் மந்திரி குமார் கனானிக்கு எதிராக சுனிதா யாதவ் களம் இறங்க வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்தனர். டுவிட்டரிலும் அவருக்கு ஆதரவு பெருகியது.
தற்போது சுனிதா யாதவ் தனது பணியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து சுனிதா யாதவ் கூறுகையில், எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் பணியை ராஜினாமா செய்கிறேன். நான் ஒரு போலீஸ் ஏட்டாக எனது கடமையை தான் செய்தேன். இது நமது ‘சிஸ்ட’த்தின் தவறு என்று தெரிவித்துள்ளார்.