நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 14 லட்சத்திற்கும் மேலானோர் டவுன்லோடு
By: Karunakaran Thu, 27 Aug 2020 2:06:10 PM
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வையும், பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ தேர்வையும் நடத்தியே தீர தேசிய தேர்வு முகமை தீர்மானமாக உள்ளது. கொரோனா காலத்தில் இந்த தேர்வுகளை நடத்தினால் சரியாக இருக்காது என பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், 7 மாநில முதல்வர்கள் நேரடியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தவுள்ளது. ஆனாலும், தேசிய தேர்வு முகமை தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை. தற்போது நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கீழ் இயங்கும் கல்லூரிகளின் 150-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் தேர்வுகளை நடத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. தேர்வு நடத்தினால் என்ன செய்வது? என்று யோசித்த மாணவர்கள் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்ய தொடங்கியுள்ளனர். இதுவரை 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோடு செய்துள்ளனர். சிலர் அவர்களுடைய அரசியல் லாபத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயற்சிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.