- வீடு›
- செய்திகள்›
- தன்னை அவமதித்த எம்.பி.க்களுக்கு தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது - பிரதமர் மோடி
தன்னை அவமதித்த எம்.பி.க்களுக்கு தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது - பிரதமர் மோடி
By: Karunakaran Tue, 22 Sept 2020 6:44:22 PM
மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்கள் பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது, அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்தார். இதனால், பாராளுமன்ற வளாக்தில் நேற்று மாலை முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காந்தி சிலை முன்பாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்களுக்கு, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் இன்று காலை தேநீர் கொண்டுவந்தார். ஆனால், அவர் கொண்டு வந்த தேநீரை பருக மறுத்த எம்.பி.க்கள், விளம்பரத்திற்காக ஊடகங்களை அழைத்துக்கொண்டு ஹரிவன்ஷ் இவ்வாறு நடந்து கொள்கின்றார் என விமர்சித்தனர்.
மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னை அவமதித்த எம்.பி.க்களுக்கு, நேரில் சென்று தேநீர் வழங்க ஹரிவன்ஷ் முன்வந்தது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. ஹரிவன்ஷை வாழ்த்துவதில் நாட்டு மக்களோடு நானும் இணைகிறேன் என்று பதிவிட்டு ஹரிவன்சை பாராட்டியுள்ளார்.