அவர்தாங்க காரணம்... குற்றம்சாட்டுகிறார் அமைச்சர் அன்பரசன்
By: Nagaraj Tue, 15 Nov 2022 11:26:52 AM
சென்னை: பொதுப் பணித்துறைக்கு பொறுப்பேற்றிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் மழை நீர் தேங்க காரணம் என்று அமைச்சர் அன்பரசன் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பரசன் கூறியுள்ளதாவது: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கொளப்பாக்கம்,கணேஷ் நகர், முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகர் ஆகிய பகுதிகளில்தான் தண்ணீர் தேங்கியுள்ளது. ஐய்யப்பன் தாங்கல், பரணிப்புத்தூர், சின்னபனிச்சேரி, கொளத்துவான்சேரி ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள்.
இதற்கு எல்லாம் காரணம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது போரூர் ஏரியியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து திட்டம் தயாரித்தோம்.
தேசிய நெடுஞ்சாலைத் துறை கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, பொதுப் பணித்துறை இத்திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றது.
இவ்வழக்கில் 2017 ஆம் ஆண்டு இரண்டு துறைகளும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் பொதுப் பணித்துறைக்கு பொறுப்பேற்றிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த சட்டசபையில் கோரிக்கை வைத்தேன். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்காததுதான் இன்றைய நிலைக்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.