ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்; கமலஹாசன் வீடியோ மூலம் இரங்கல்
By: Monisha Fri, 25 Sept 2020 3:30:34 PM
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரது மறைவு குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில் எஸ்பிபி மறைவு குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
வெகு சில பெரும் கலைஞர்களுக்கு மட்டுமே தாம் வாழும் காலத்திலேயே அவரது திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் திரு எஸ்பிபி அவர்கள். நாடு தழுவிய புகழ் மழையில் நினைத்தபடியே அவரை வழியனுப்பி வைத்த அவரின் அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனான என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
அவர் நனைந்த மழையில் கொஞ்சத்தை நானும் பகிர அனுமதித்த அண்ணனுக்கு எனது நன்றிகள் அவரின் குரலில் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நாலு தலைமுறை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர் ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்! இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.