ஊதிய உயர்வு கோரி சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
By: Nagaraj Sat, 07 Oct 2023 12:36:08 PM
அமெரிக்கா: அமெரிக்காவில் 6 சதவீதம் ஊதிய உயர்வு கோரி சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் சுகாதாரத்துறை ஊழியர்கள் 75 ஆயிரம் பேர் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 மாநிலங்களில், லாப நோக்கமற்ற முறையில் மருத்துவ சேவைகளை வழங்கி வரும் கைசர் பெர்மனண்டே நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
விலைவாசி உயர்வையும், கொரோனா கால பணிச்சுமையையும் சுட்டிக்காட்டி 6 சதவீதம் ஊதிய உயர்வு கோரிவந்த நிலையில், நிர்வாகம் தர மறுத்ததால் பல மாநிலங்களில் சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வாகன தயாரிப்பு, திரைத்துறை, மருத்துவத்துறைகளைச் சேர்ந்த 3 லட்சம் ஊழியர்கள் இந்தாண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.