கொரோனாவை கட்டுப்படுத்த பல்லாவரத்தில் வீடு வீடாக மக்களுக்கு வெப்பம், ஆக்சிஜன் சோதனை
By: Nagaraj Sat, 20 June 2020 11:23:44 AM
பல்லாவரம் நகராட்சியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வீடுகள் தோறும், வெப்பம் மற்றும் ஆக்சிஜன் சோதனை நடத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அடுத்த, 3 நாட்களில், ஒட்டு மொத்த விபரமும் சேகரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகராட்சியில், கொரோனா தொற்று, ஒவ்வொரு நாளும், அதிகரித்து வருகிறது. இதுவரை, 344 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 197 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த, நகராட்சி சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நகராட்சியில் உள்ள, 42 வார்டுகளையும், கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளன. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சி.மதிவாணன் கூறியதாவது:
நகராட்சியில், 73 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. அனைத்து
குடியிருப்புகளையும் சுத்தம் செய்ய, நகராட்சி சார்பில், பிளிச்சிங் பவுடர்,
தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புகளை ஒட்டு மொத்தமாக சோதனை
செய்து, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பணி துவங்கிஉள்ளது. இதற்காக,
360 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு குழுவிற்கு, இரண்டு
நபர்கள் வீதம், 180 குழுக்களாக பிரித்துள்ளோம். ஒவ்வொரு குழுவினரும்,
அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்று, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும், வெப்பம் மற்றும் ஆக்சிஜன்
சோதனை நடத்துவர். மேலும், சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் மற்றும்
புற்றுநோய், காசநோய், இதய நோய், ஆஸ்துமா, நீண்ட நாள் சிகிச்சை பெறுவர்கள்
குறித்தும் பட்டியல் தயார் செய்வர்.
இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு
தர வேண்டும். இந்த பட்டியலை கொண்டு, நகராட்சி மருத்துவர்கள்,
சந்தேகப்படும் படியான வீடுகளுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து,
சம்மந்தப்பட்டவர்களை மருத்துவனைக்கு அனுப்புவர். அடுத்த மூன்று நாட்களில்,
42 வார்டுகளின் பட்டியலும், நகராட்சிக்கு வந்துவிடும்.
அதேநேரத்தில்,
இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக, சளி, காய்ச்சல்,
இருமல் போன்ற அறிகுறிகளை கண்டறியும் ஊழியர்களுக்கு, ஒரு சோதனைக்கு, 200
ரூபாய் என்ற அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு, அவர்
கூறினார்.