அசாமில் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
By: Karunakaran Tue, 30 June 2020 09:22:43 AM
இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அசாமில் கனமழை காரணமாக அங்குள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பேரிடர் மீட்புக்குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அசாமில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி நேற்று 4 பேர் பலியாகியதால், அங்கு கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமான பெரிய விலங்குகள், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறிய விலங்குகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து பேரிடர் மீட்புக்குழுவினர் கூறுகையில், 25 மாவட்டங்களை சேர்ந்த13 லட்சத்து 16 ஆயிரத்து 927 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், 273 நிவாரண முகாம்களில் 27 ஆயிரத்து 452 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.