13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
By: Monisha Thu, 05 Nov 2020 08:58:53 AM
தமிழகத்தில் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை விவரம் வருமாறு:- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 7 செ.மீ. மழையும், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நீலகிரி மாவட்டம் திருப்பூர், குன்னூர் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.