சென்னையில் விடிய விடிய கனமழை... அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
By: Monisha Wed, 25 Nov 2020 08:49:16 AM
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக புரசைவாக்கத்தில் 15 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. சென்னையில் உள்ள பிற பகுதியில் பதிவாகியுள்ள மழை அளவு விவரம்:-
சோழிங்கநல்லூர் - 14.5 செ.மீ.
கிண்டி- 14.3 செ.மீ.
நுங்கம்பாக்கம்- 14 செ.மீ.
அண்ணா பல்கலைக்கழகம்- - 14 செ.மீ.
மயிலாப்பூர்- 14 செ.மீ.
எழும்பூர்- 13.7 செ.மீ.
மாம்பலம்- 13.6 செ.மீ.
ஆலந்தூரில்-11.9 செ.மீ.
மேலும் இன்று பல இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதீத கனமழையும், தமிழகத்தின் ஏனைய வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.