இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு
By: vaithegi Tue, 09 May 2023 4:00:00 PM
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ... தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுபெறக்கூடும்.
இதனை அடுத்து இது 11.05.2023 வரை வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும். 09.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையை பொருத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.