கேரளாவில் வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு
By: vaithegi Sun, 31 July 2022 2:58:07 PM
கேரளா : கோடைக்காலம் முடிவுக்கு வந்த கையோடு பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக அநேக இடங்களில் மழைப்பொழிவை காண முடிகிறது. இதனைத்தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தென் மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியின் காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது அடுத்து கேரளாவிலும் வருகிற புதன்கிழமை வரை பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு
மேலும் கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனால் ஆற்றங்கரைப் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் உண்டாகும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரளா பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இன்னும் சில நாட்களில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுவதற்கும் அதிகளவு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.