இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடுமாம்
By: vaithegi Sat, 11 Nov 2023 4:38:13 PM
சென்னை: 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ... புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வரும் நவம்பர் 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 14 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் 14 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நவம்பர் 16 ஆம் தேதி மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும். மத்திய, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோன்று அடுத்த 2 மணிநேரத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 13 சதவீதம் குறைவாக பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்றுவரை இயல்பாக 254.1. மி.மீ பதிவாக வேண்டிய சூழலில் 220 மி.மீ மட்டுமே பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.