தமிழகத்தில் மேலும் கனமழை நீடிக்கும்
By: vaithegi Wed, 02 Nov 2022 3:45:18 PM
சென்னை: அக்டோபர் 31ம் தேதி அன்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதற்கு முன்பாகவே மழை அதிகமாக இருந்து வந்த நிலையில், பருவமழை தொடங்கியதும், தொடர்ந்து விடாமல் சில மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது.
இதனால் சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வரை 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்து கொண்டு வருகிறது.
இதையடுத்து வளிமண்டல காற்றின் சுழற்சிக்கு ஏற்ற திசைகளில் உள்ள மாவட்டங்களில் மழை நீடிக்கிறது. வானிலை அறிவிப்பின் படி, நவம்பர் 5ம் தேதி வரை வட தமிழக பகுதிகளில் அதிகம் பொழியும் மழையானது, அதன்பிறகு 8ம் தேதி வரை தென்தமிழக பகுதிகளில் பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, புதுச்சேரி, காரைக்கால், சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக 20 செமீ அளவு வரை மழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.