அசாமில் கனமழை காரணமாக முன்னாள் தலைமை நீதிபதி வீட்டில் வெள்ளம்
By: Karunakaran Sat, 27 June 2020 09:35:45 AM
இந்தியா முழுவதும் பரவி வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தர பிரதேசம், பீகாரில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.
முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது, அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தில்பர்கா மாவட்டத்திலும் பலத்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து சுமார் 25 ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக மாவட்ட துணை கலெக்டர் பல்லவ் கோபால் ஜா தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக 14 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தில்பர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் வீட்டையும் வெள்ளம் சூழ்ந்ததாகவும், அங்கிருந்த அவரது தாயார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட துணை கலெக்டர் தெரிவித்துள்ளார்.