நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் கடும் சேதம்
By: Karunakaran Mon, 13 July 2020 2:58:32 PM
கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் வெள்ளம், கனமழை, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக கடந்த 4 நாட்களில் மட்டும் ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு காரணமாக சேறும், சகதியும் சரிந்து வீடுகள் விழுந்ததில் பலர் உயிரிரோடு புதைந்தனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 41 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணியில் தொடர்ந்து மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கனமழை காரணமாக மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மியாக்தி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.