Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேலூரில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் சாலைகள் மற்றும் வீடுகள்

வேலூரில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் சாலைகள் மற்றும் வீடுகள்

By: Monisha Fri, 27 Nov 2020 09:10:09 AM

வேலூரில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் சாலைகள் மற்றும் வீடுகள்

நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் மிதமான காற்றுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூரில் பல இடங்களில் இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. சில சமயங்களில் இடி சத்தம் கேட்டது. தொடர்ச்சியாக வேலூர் மாநகரில் மதிய வேளையில் பலத்த காற்று வீச தொடங்கியது. அதனால் மழையின் வேகமும் அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல மழையின் தீவிரமும், காற்றின் வேகமும் கூடியது. மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரத்தில் 67 செ.மீ. மழையளவு பதிவானது.

பொதுவிடுமுறை காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில ஓட்டல்கள், டீக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. கனமழை காரணமாக வேலூர் மாநகரின் முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதனால் பொதுமக்கள் முக்கிய ஆவணங்களை பத்திரமாக வைத்து வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு சென்றனர்.

vellore,heavy rains,floods,roads,houses ,வேலூர்,கனமழை,வெள்ளம்,சாலைகள்,வீடுகள்

காட்பாடி அருகே உள்ள மாதாண்டகுப்பம் ஏரி கரை நேற்று மதியம் 1.30 மணியளவில் திடீரென உடைந்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி ஊருக்குள் புகுந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். காட்பாடி தாலுகாவில் 25 இடங்களில் மரங்கள் விழுந்தன. நான்கு இடங்களில் மின்கம்பங்கள் விழுந்து சேதமாகின. 5 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

ஜவ்வாதுமலைத் தொடரில் இருந்து உருவாகி மேல்அரசம்பட்டு வழியாக ஓடும் உத்திரகாவேரி (அகரம்) ஆற்றில் கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளம் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. நிவர் புயல் மழை காரணமாக நேற்று இரவில் இருந்து உத்திரகாவேரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

vellore,heavy rains,floods,roads,houses ,வேலூர்,கனமழை,வெள்ளம்,சாலைகள்,வீடுகள்

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மேல்அரசம்பட்டு பகுதிக்கு விரைந்து வந்து, அங்குக் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உத்திரகாவேரி ஆற்று கரையோரம் வசித்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதியில் 3 ஆயிரத்து 460 கனஅடியும், கவுண்டன்ய நதியில் 3 ஆயிரத்து 320 கனஅடியும், அகரம் ஆற்றில் 4 ஆயிரம் கனஅடியும், பொன்னை ஆற்றில் 7 ஆயிரத்து 40 அடியும், பாலாற்றுக்கு 17 ஆயிரத்து 820 கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags :
|
|