தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும்... வானிலை மையம்
By: Monisha Thu, 26 Nov 2020 07:34:01 AM
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. அதிதீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. புயல் காரணமாக சென்னை, கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
புயல் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை முழுவதும் கரையை கடந்தது. அப்போது, புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்நிலையில், புயல் கரையை கடந்ததை தொடர்ந்து வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
புதுச்சேரி அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 வரை புயல் கரையை கடந்தது. புயல் தற்போதுவரை தமிழகத்தின் நிலப்பகுதியில் தான் உள்ளது. காற்றும், மழையும் தொடரும்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும். தீவிரபுயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறி அதிக கனமழையை தரும் என்றார்.