லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த வீரர் பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி
By: Nagaraj Wed, 17 June 2020 07:42:43 AM
முதல்வர் உத்தரவு... லடாக் எல்லையில் நடந்த சீனாவுடனான தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த மோதலில், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் ராணுவ வீரர் பழனி உயிரிழந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.
இரவு, பகல் பாராது, தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின்
பாதுகாப்புப் பணியில் தம்மை அப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த ராணுவ
வீரர் பழனியின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின்
குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய திருநாட்டிற்காக தனது இன்னுயிரை
தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு இருபது லட்சம்
ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
அன்னாரின்
குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான்
உத்தரவிட்டுள்ளேன். வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்தினரை நேரில்
சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும்,
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.