தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் நர்ஸ் ஒருவருக்கு சிங்கப்பூரில் உயரிய விருது
By: Karunakaran Thu, 23 July 2020 5:59:29 PM
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸுக்கு எதிராக மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் முன்னின்று போராடி வருகின்றனர். சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் பரவல் உள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னின்று போராடியதற்காக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நர்ஸ் ஒருவருக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது அந்த பெண் நர்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கலா நாராயணசாமி என்ற பெண் நர்ஸுக்கு தற்போது 59 வயதாகிறது. இவர் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பயன்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கலா நாராயணசாமியுடன் சேர்ந்து 5 நர்சுகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 5 பேருக்கும் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் கையெழுத்திட்ட சான்றிதழ், கோப்பை மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம்) சன்மானமாக வழங்கப்பட்டுள்ளது.