வடகொரியாவில் அதிபர் கிம்ஜான் உன் நடத்திய உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
By: Nagaraj Tue, 09 June 2020 08:01:29 AM
பொருளாதாரத்தை உயர்த்தும் வழிகள்... வட கொரியாவில் நடந்த ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை, அதிகாரிகளிடம், அதிபர் கிம் ஜாங் உன் எடுத்துரைத்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக, பெரும்பாலான நாடுகளில், வர்த்தகம், தொழில் என பல துறைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. கிழக்காசிய நாடான வட கொரியாவில், கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை என, அந்நாட்டு அரசு கூறி வருகிறது. எனினும், அந்நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சவாலான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைநகர் பியாங்யாங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அதை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வது குறித்தும், மூத்த அதிகாரிகளுடன், கிம் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், ''பொருளாதார வளர்ச்சியை உந்தும் மிகப்பெரிய சக்தியாக, ரசாயன தொழிற்சாலைகள் விளங்கும். அதோடு, உரங்களை உற்பத்தி செய்வதற்கான திறனை அதிகரிக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.