அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய சேவைகள்; அமைச்சர் மனோ.தங்கராஜ் தகவல்
By: Nagaraj Mon, 03 Apr 2023 10:06:03 AM
சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள அரசின் அலுவலகங்களுக்கு அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்கான திட்டம் உள்ளது. மேலும் இதற்கான செயல்பாடுகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் மனோ.தங்கராஜ் அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 20ம் தேதி அன்று நடந்து முடிந்த பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, தற்போது அரசு துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் தினமும் துறை வாரியாக நடைபெற்று கொண்டு வருகிறது.
அரசின் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான எதிர்க்கட்சியினர் மற்றும் இதர கட்சியினரின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பான அரசின் புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி அமைச்சர் மனோ.தங்கராஜ் பேசியுள்ளார்.
அப்போது, மாநிலம் முழுவதும் உள்ள அரசின் அலுவலகங்கள் மற்றும் குடும்பங்களுக்கும் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்கான திட்டம் உள்ளதாகவும், மேலும் இதற்கான செயல்பாடுகள் விரைவில் தொடங்கும் என அவர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து அரசு அலுவக இணைய பணிகளுக்கு ரூ.184 கோடியும், 20,000 தமிழக குடும்பங்களுக்கான குறைந்த செலவிலான அதிவேக இணையத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்