பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேற்கு வங்காளத்தில் இன்று விடுமுறை
By: Karunakaran Tue, 01 Sept 2020 09:32:10 AM
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று இரவு மரணமடைந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் மரணம் அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்காளமாநிலத்துக்கு பெருமை சேர்த்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அங்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மரணமடைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், மரணமடைந்த முன்னாள் ஜனாதிபதியும், வங்காளத்தின் புகழ்பெற்ற மகனுமான பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்துக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், அவரது இறுதிச்சடங்கு இன்னொரு நாளில் நடந்தால், அன்றைய தினமும் இதுபோன்று விடுமுறை விடப்படும். இன்று மாநில போலீஸ் தினம் என்பதால், அதற்கான சிறப்பு அனுசரிப்பு 8-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.