2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்ற உள்துறை மந்திரி அமித் ஷா
By: Karunakaran Sat, 19 Dec 2020 08:25:27 AM
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடபெற உள்ளது. மேற்கு வங்காளத்தில் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில் இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ‘மிஷன் பெங்கால்’ என்ற பெயரில் தேர்தல் பணிகளை பா.ஜனதா தொடங்கி ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும், முக்கிய பிரமுகர்களை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. இந்நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சமீபத்தில் மேற்கு வங்காளம் சென்று ஆதரவு திரட்டியபோதுதான் அவரது கார் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினார்கள்.
இதனால் ஜே.பி.நட்டா-வின் பயணத்திற்கான பாதுகாப்பு பணிகளுக்கு பொறுப்பான 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு இடம்மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு விடுவிக்க மேற்குவங்காள அரசு மறுத்துவிட்டது. இதனால், மத்திய பாஜக அரசுக்கும் முதல்மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே அதிகார மோதல் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அதிகாலை 2 மணியளவில் மேற்குவங்காளம் சென்றடைந்தார். இந்த பயணத்தின்போது பாஜக கட்சி கூட்டங்களிலும், தேர்தல் பிரசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அமித்ஷா பங்கேற்கிறார். பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட நிலையில், தற்போது உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவின் பயணம் மேற்குவங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.