எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை காப்பாற்றுவது மிகவும் கடினம்; மருத்துவமனை தகவல்
By: Monisha Fri, 25 Sept 2020 12:32:16 PM
திரையுலகில் 50 ஆண்டுகளாக பல்லாயிரம் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை மீண்டும் நேற்று திடீரென கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில் எஸ்பிபி உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் பூபதிஜான் அவர்கள் கூறியதாவது:- "எஸ்பிபி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது லேசான கொரோனா அறிகுறிகள்தான் இருந்தது. ஆனால் அதன்பின் எட்டாவது நாள் முதல் பனிரெண்டாவது நாள் வரை அவரது உடல்நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் அவரது உடல் முழுவதும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதன் பின் அவருக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டன. அதன் பின்னர் அவர் வெண்டிலட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டார். அதன்பின் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதால் நுரையீரல் செய்யும் வேலையை செய்வதற்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருடைய உடலில் உள்ள மேலும் ஒருசில பாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை காப்பாற்றுவது மிகவும் கடினம்" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு எஸ்பிபியை பார்க்க சென்ற உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறியபோது, 'எஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று கூற முடியாது' என்று கூறியுள்ளார். எஸ்பிபி அவர்களை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கூறி இருப்பது பெரும் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.