ஐநாவில் கைலாசா பெண்கள் பிரதிநிதியாக கலந்துக்கொண்டது எப்படி? வெளியான தில்லுமுல்லு
By: Nagaraj Fri, 03 Mar 2023 11:21:57 AM
நியூயார்க்: ஐநாவில் கைலாசா பெண்கள் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவு பெரிய தில்லுமுல்லு செய்துள்ளனர் என்று அம்பலமாகியுள்ளது.
ஐ.நா-வில் நடைபெற்ற பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குழுவின் கூட்டத்தில், `United States of Kailasa'-வின் பிரதிநிதிகள் எனப் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.
இந்தக் கூட்டத்தில், கைலாசாவின் பிரதிநிதி எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிய விஜயப்ரியா, ``இந்து மதத்தின் முதல் இறையாண்மை கொண்ட நாடு கைலாசா. இதை நிறுவியவர், இந்து மதத்தின் உயரிய தலைவர் நித்யானந்த பரமசிவம்.
இந்து மதத்தின் பூர்வீக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் புதுப்பிப்பதற்காக, இந்து மதத்தின் உயரிய தலைவர் நித்யானந்தா மிகக் கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார். மேலும் இவர், தான் பிறந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐ.நா அமைப்பில் 193 நாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது. இதில் கைலாசா இடம் பெறவில்லை. ஆனால் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு,தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேசஅனுமதிக்கிறது.
இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.