தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி ?
By: Karunakaran Thu, 25 June 2020 4:32:20 PM
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக மும்பை உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவி மும்பையில் தான் உள்ளது. 2½ சதுர கி.மீ. பரப்பளவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இங்கு வசிக்கின்றனர். தமிழகத்தில் இருந்து பிழைக்க சென்றவர்களுக்கு இரண்டாவது தாய்வீடாக தாராவி தான் உள்ளது.100 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையில் சர்வ சாதாரணமாக 10 பேர் வாழ்வது இந்தியாவிலேயே தாராவியில் மட்டும்தான்.
தனி மனித இடைவெளியை பின்பற்றுவதெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லாத அளவிற்கு சின்ன சின்ன சந்துகள் அங்கு உள்ளன. தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வீடுகளில் சமைப்பது கிடையாது. வெளியே சென்று தான் சாப்பிடுவார்கள். இப்படியுள்ள தாராவியில் உள்ள பாலிகா நகரில் ஏப்ரல் 1-ந் தேதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தாராவியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது மும்பையை அதிர்ச்சியடைய செய்தது. தாராவியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால், அது என்ன வேகத்தில் மற்றவர்களுக்கு பரவும் என அச்சத்தில் இருந்தனர்.
தாராவியில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு ஏறத்தாழ 450 முதல் 500 கழிவறைகளை மட்டும் தான் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், 3 மாத காலத்தில் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே அங்கு கொரோனா பரவியது. கடந்த மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக 43 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இது 19 ஆக குறைந்துள்ளது. மக்கள் அளித்த ஒத்துழைப்பு காரணமாக தான் அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து அதிகளவிலான பரிசோதனைகள் நடத்தியது, தினக்கூலி தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கியது, வீடு வீடாக சென்று ஒவ்வொரு குடும்பத்திலும் யாருக்கேனும் தொற்று பாதிப்பு, அறிகுறிகள் இருக்கிறதா என அறிந்தது போன்றவை தான் அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா முகாம்கள் அமைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிப்படுத்தப்பட்டனர். மேலும், ஊரடங்கில் பொதுமக்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படக்கூடாது என பல தரப்பினரும் உணவுப்பொட்டலங்கள் வழங்கி மக்களின் பசியை போக்கியதும் காரணமாகும்.