- வீடு›
- செய்திகள்›
- பிகில் படத்தால் நஷ்டம் என்று நான் கூறவே இல்லை; தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்
பிகில் படத்தால் நஷ்டம் என்று நான் கூறவே இல்லை; தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்
By: Nagaraj Fri, 29 May 2020 11:15:11 AM
'பிகில்' படத்தால் ரூ.20 கோடி நஷ்டம் என்று நான் கூறியதாக வெளியான தகவல் பொய் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுப்பு தெரிவித்துள்ளார். இத்தகவலை அவர் தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்த அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். நயன்தாரா, டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.
'பிகில்' படத்தின் வசூல் நிலவரம் தொடர்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனிடையே இந்தப் படம் 20 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று சில தினங்களாக தகவல் பரபரப்பாக பரவியது.
இந்தத் தகவலைக் கூறியதே ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்த்த தலைமை செயல் அதிகாரியான அர்ச்சனா கல்பாத்தி தான் என்றும் சிலர் குறிப்பிட்டனர். தற்போது இச்செய்திகளுக்கு அர்ச்சனா கல்பாத்தி மறுப்பு தெரிவித்துள்ளார். தான் அவ்வாறு எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லை. இந்தத் தகவல் தவறானது எனவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.