நான்தான் இன்னமும் பிரதி செயலாளர்; அனுஷா சந்திரசேகரன் பிடிவாதம்
By: Nagaraj Mon, 08 June 2020 07:39:28 AM
மலையக மக்கள் முன்னணி பிரதி செயலாளர் நாயகமாக இன்றளவிலும் நானே இருக்கின்றேன் என்று சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்
மலையக மக்கள் முன்னணியிலிருந்து நான் நீக்கப்பட்டதாக ஊடகத்தின் வாயிலாகவே அறிந்தேன். இதற்கு ஒரு சட்டத்தரணியாக பதிலளிப்பதே பொருத்தமாக இருக்கும். மலையக மக்கள் முன்னணியின் யாப்பின் பிரகாரம் நான் நீக்கப்படவில்லை. எனவே, நானே பிரதி செயலாளர் நாயகமாக இன்றளவிலும் இருக்கின்றேன்." இவ்வாறு சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
கட்சியிலிருந்து அனுசா சந்திரசேகரனை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ள மலையக மக்கள் முன்னணி, அவர் வகித்த பிரதி பொதுச்செயலாளர் நாயகம் பதவிக்கும் புதியவர் ஒருவரை நியமித்துள்ளது.
இது தொடர்பில் கேட்டபோதே அனுஷா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததுள்ளதாவது:
"நான் பதவியிலிருக்கும்போதே இன்னொருவரை நியமித்தமைக்கு எதிராக வேண்டுமானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். புரட்சித் தலைவன் அமரர் சந்திரசேகரனின் மகளாக சட்டம் படித்த ஒரு சட்டத்தரணியாக இவ்வாறான ஊடக அறிக்கைகளினால் ஒருபோதும் என்னைப் பின்னடையச் செய்யவோ அல்லது என்னுடைய அரசியல் பயணத்தைத் தடுக்கவோ முடியாது.
எனது தந்தை அமரர் சந்திரசேகரன் எவ்வாறு 1994ஆம் ஆண்டு தனித்துக் களமிறங்கினாரோ அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நான் தனித்துக் களமிறங்குவதும் வெல்வதும் உறுதி. இம்முறை தேர்தலில் வெற்றி பெற்று அமரர் சந்திரசேகரன் வழிவந்த மலையக மக்கள் முன்னணி ஆதரவாளர்களுக்கும், மலையக மக்களுக்காகவும் எனது குரல் என்றென்றும் ஒலிக்கும்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.