உங்களுக்கு உழைப்பதை என் வாழ்நாள் கடமையாக கருதி உழைத்து வருகிறேன் .. மு.க. ஸ்டாலின்
By: vaithegi Sat, 27 Aug 2022 08:22:35 AM
ஈரோடு: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.262 கோடி செலவில் 135 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.184 கோடி மதிப்பீட்டிலான 1,761 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 63,858 பயனாளிகளுக்கு ரூ.167.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதை அடுத்து அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பேசுகையில் ஊருக்கு உழைப்பதை, உங்களுக்கு உழைப்பதை என் வாழ்நாள் கடமையாக கருதி உழைத்து வருகிறேன். அழுத்தமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன்.
மேலும் நான் வாழ்ந்த காலத்தில் தமிழ்ச்சமுதாயத்தை வளமும், நலமும் பெற்ற சமுதாயமாக - தமிழ்நாட்டை வளமும், நலமும் கொண்டிருக்கக்கூடிய மாநிலமாக மாற்றிக்காட்டினேன் என்று பெயரெடுப்பதற்காகவே நான் உழைத்து வருகிறேன்.
கோட்டையில் இருந்தாலும், மக்களின் மனங்களில் வாழ்வதையே பெரும் பேறாகக் கருதக்கூடியவன் நான். எனவே, உங்கள் அனைவரின் ஆதரவோடு, என் இலக்கை நோக்கி நான் நடைபோடுகிறேன். உங்கள் துணையோடு நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என அவர் பேசினார்.