கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் - பிரதமர் மோடி
By: Karunakaran Sat, 08 Aug 2020 4:37:34 PM
கொரோனா ஊரடங்கினால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் மற்றும் 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தனர்.
துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது, பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.இதனால் விமானம் தரையிறங்கியபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி சென்று அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிரிந்தது.
இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தன் அன்புக்குரியவர்களை இழந்தவர்களை எண்ணி, என் மனம் வருந்துவதாக பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். களத்தில் அதிகாரிகள் நிற்கிறார்கள். மீட்பு பணிகள் விரைவாக நடக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குகிறார்கள் என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.