கொரோனாவில் இருந்து மீண்டு விரைவில் மக்கள் பணிக்கு திரும்புவேன் - சுமலதா எம்.பி.,
By: Karunakaran Thu, 23 July 2020 6:43:16 PM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்கள் மட்டுமின்றி மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தாக்கி வருகிறது. அங்குள்ள பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள், 3 மேல்-சபை உறுப்பினர்கள், 2 எம்.பி.க்கள் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களில் மறைந்த கன்னட நடிகர் அம்பரீசின் மனைவியும், மண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி.யான சுமலதாவும் ஒருவராவார். இந்நிலையில் கடந்த 6-ந் தேதி சுமலதா எம்.பி., தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், இதனால் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமலதா எம்.பி. கொரோனாவில் இருந்து மீண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை சுமலதா எம்.பி. மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று சுமலதா எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில், தான் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் நான் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்து உள்ளேன். இந்த 3 வார கால கட்டாய தனிமையை மன வேதனையுடன் அனுபவித்து முடித்து உள்ளேன்.டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் வீட்டில் ஒய்வெடுக்க உள்ளேன். விரைவில் மக்கள் பணிக்கு திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.