- வீடு›
- செய்திகள்›
- புதிய கல்வி கொள்கை பிரச்சினைகள் குறித்து மாநிலங்களவையில் பேசுவேன் - முன்னாள் பிரதமர் தேவகவுடா
புதிய கல்வி கொள்கை பிரச்சினைகள் குறித்து மாநிலங்களவையில் பேசுவேன் - முன்னாள் பிரதமர் தேவகவுடா
By: Karunakaran Thu, 27 Aug 2020 1:57:48 PM
கொரோனா பாதிப்பால் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி பெங்களூருவில் நேற்று காலையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆதரவு அளித்ததுடன், போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது தேவகவுடா அளித்த பேட்டியில், கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினை உள்பட இன்னும் பல பிரச்சினைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று கூறினார்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. கர்நாடக அரசும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. புதிய கல்விக் கொள்கையில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகள் பற்றி மாநிலங்களவையில் பேச உள்ளேன். அப்போது புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி விளக்கமாக பேச முடிவு செய்துள்ளதாக தேவகவுடா தெரிவித்தார்.
மேலும் அவர், தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனை காக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும். இதுபற்றி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். மீண்டும் ஒரு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன். ஊரடங்கால் ஆசிரியர்கள் சந்தித்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மாநிலங்களவையிலும் பேச உள்ளேன் என்று கூறினார்.