- வீடு›
- செய்திகள்›
- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐ.ஏ.எஸ்., பணியிடம் ஒதுக்கப்படாதது குறித்து பதிலளிக்க உத்தரவு
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐ.ஏ.எஸ்., பணியிடம் ஒதுக்கப்படாதது குறித்து பதிலளிக்க உத்தரவு
By: Nagaraj Wed, 21 Oct 2020 8:43:44 PM
பதில் அளிக்க உத்தரவு... சிவில் சர்வீஸ் தேர்வில் 286-வது இடத்தை வென்ற மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை சிம்மக்கல் மணி நகரை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவிபூர்ண சுந்தரி 4 வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்தியா அளவில் 286வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு ஐஆர்எஸ் (இந்திய வருவாய்ப் பணி- வருமான வரி) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தனக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூரண சுந்தரி மனுத் தாக்கல் செய்தார். அதில், ”ஓபிசி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டப்படி எனக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், எனக்கு ஐஆர்எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவில் என்னை
விடக் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஐஏஎஸ் பணியிடம்
வழங்கப்பட்டுள்ளது” எனப் பூரணசுந்தரி கூறியிருந்தார்.
இந்த மனுவை
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளையின் தலைவர் எஸ்.என்.டீர்டல், நிர்வாக
உறுப்பினர் சி.வி.சங்கர் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில்
வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் மதுரம் வாதிட்டனர். பின்னர், 2019-ம்
ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீடு
செய்து 25.09.2020-ல் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல் இந்த வழக்கின்
இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி
22-ம் தேதிக்குத் தீர்ப்பாயம் ஒத்தி வைத்தது.
மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ்,
ஐஆர்எஸ் பணி ஒதுக்கீட்டுப் பட்டியல் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக்
கட்டுப்பட்டது என்றும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.