நமக்கு கீழே தாழ்ந்த சாதி யாருமில்லை என நினைத்தால் பிரச்னையே வராது ..சீமான்
By: vaithegi Mon, 06 Nov 2023 3:48:10 PM
சென்னை: ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் திட்டமிட்டே சோதனை நடைபெறுகிறது.
இதையடுத்து தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சோதனைகள் மேற்கொள்வது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் உள்ளது. இதில் நேர்மை இல்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்கட்சிகளை மிகவும் அச்சுறுத்துகின்றனர். முதல்வர் சொன்னது சரி தான்.
சனாதன என்றால் என்ன என்கின்ற வரையறையை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இங்கு ஆதிக்க சாதி எனவும் ஒருவருமில்லை, அடிமை சாதி எனவும் ஒருவருமில்லை. நான் உயர்ந்த சாதி என எண்ணுபவர்கள், நமக்கு கீழே தாழ்ந்த சாதி யாருமில்லை என்று நினைத்தால் பிரச்னையே வராது.
மேலும் நடிகர் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார்; அவர் படம் நடிப்பதை நிறுத்திவிட்டு கட்சி ஆரம்பிப்பார். வந்த பிறகு அவருடன் கூட்டணி பற்றி பேசி முடிவு சொல்லலாம்; தற்போது நான் தனித்து போட்டியிடுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.