- வீடு›
- செய்திகள்›
- டாஸ்மாக்கை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள்; ரஜினிகாந்தின் அதிரடி டுவிட்
டாஸ்மாக்கை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள்; ரஜினிகாந்தின் அதிரடி டுவிட்
By: Nagaraj Sun, 10 May 2020 11:18:26 AM
டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என்று அதிரடி டுவிட் போட்டு அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 43 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை திறந்தது.
டாஸ்மாக்கை திறக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால் சரக்கு கிடைத்தால் போதும் என்ற அளவிற்கு டாஸ்மாக்குகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சமூக இடைவெளி என்பது மறக்கடிக்கப்பட்டது.
இது குறித்து கடந்த 8 ஆம் தேதி எழுந்த அவசர வழக்கில் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படாததால் டாஸ்மாக்குகளை மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற வீடியோக்களும் போட்டோக்களும் சமர்பிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என குறிப்பிட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.