- வீடு›
- செய்திகள்›
- ஒவ்வொரு குடும்பத்தின் வங்கி கணக்கிலும் உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்குங்கள் - சோனியா காந்தி
ஒவ்வொரு குடும்பத்தின் வங்கி கணக்கிலும் உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்குங்கள் - சோனியா காந்தி
By: Monisha Fri, 29 May 2020 10:27:46 AM
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சியின் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு மோசமான பொருளாதார பாதிப்பை சந்தித்து உள்ளது. நாட்டு மக்களின் வாழ்வாதாரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. மக்களின் அழுகுரல் நாட்டில் உள்ள அனைவருக்கும் கேட்கிறது. ஆனால் மத்திய அரசின் காதுகளில் மட்டும் விழவில்லை.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு வெறுங்கால்களுடன் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு போக்குவரத்து வசதியோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. சுதந்திரம் அடைந்த பிறகு இப்படி ஒரு துயரமான நிலையை நாடு இப்போதுதான் காண்கிறது.
எனவே மத்திய அரசு தனது பணப்பெட்டியை திறந்து மக்களுக்கு உதவவேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு குடும்பத்தின் வங்கி கணக்கிலும் ஒவ்வொரு மாதமும் தலா ரூ.7,500 வீதம் அடுத்த 6 மாதங்களுக்கு செலுத்துங்கள். உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்குங்கள்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக பயணம் செய்து தங்கள் சொந்த ஊர்களுக்கு போய்ச் சேருவதை உறுதி செய்யுங்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பும், ரேஷன் பொருட்களும் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.
இந்திய மக்கள் எழுப்பும் குரலின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் ‘ஸ்பீக் அப் இந்தியா‘ என்ற பெயரில் சமூக ஊடகத்தில் காங்கிரஸ் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. மக்களின் குரலை வலுப்படுத்த காங்கிரஸ் உதவும். அனைவரும் ஒன்றிணைந்து நெருக்கடியான இந்த காலகட்டத்தில் இருந்து மீண்டு வருவோம். இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.