பாரபட்சமற்ற ஆய்வு மற்றும் விசாரணை நடத்தபடும் - உலக சுகாதார அமைப்பு
By: Monisha Tue, 19 May 2020 2:10:18 PM
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கி வருகிறது. நோய் தொற்றால் இதுவரை 3 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் உகான் நகரத்தில் தான் கண்டறியப்பட்டது. அதனால் கொரோனா வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்துதான் உருவாக்கப்பட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் வைரஸ் குறித்த தகவல்களை சீனா மறைத்து வருவதாகவும் பல்வேறு தரப்பினரும் சீனா மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட 73-வது உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில், கொரோனா வைரஸ் எப்படி ஆரம்பித்தது மற்றும் பரவியது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தீர்மானம் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 116 நாடுகள் ஆதரவளித்துள்ளன. மொத்தம் 194 உறுப்பினர்கள் உள்ள இந்த அவையில், இத்தீர்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.
இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த சீனா பின்னர் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு பணிந்து ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்து நிலைமை சீரான பிறகு விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும் என்றும் முதலில் மக்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விவாதத்தில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
பல்வேறு நாடுகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த பின் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனோம் ஜெப்ரெயேசஸ், பாரபட்சமற்ற ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஒப்புக்கொண்டார்.