வீடு புகுந்து கைது செய்யப்பட்டார் இம்ரான்கான்: 3 ஆண்டுகள் சிறை
By: Nagaraj Sat, 05 Aug 2023 7:26:11 PM
இஸ்லாமாபாத்: மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தோஷகானா ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் அவருக்கு ஒரு லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் இம்ரான் கான் வேண்டுமென்றே தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் அவர் குற்றவாளி என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், வெளிநாட்டுப் பயணங்களின் போது கிடைத்த பல பரிசுப் பொருட்களை அரசின் தோஷகானாவிடம் ஒப்படைக்காமல், சிலவற்றை விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் இம்ரான்கான் எம்.பி. பதவியை இழக்கிறார். இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்த சிறிது நேரத்திலேயே, லாகூரில் உள்ள அவரது ஜமான் பார்க் இல்லத்திற்குள் புகுந்து பஞ்சாப் காவல்துறையினரால் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
இதே போல் கடந்த மே 9 அன்று கைது செய்யப்பட்டார். அப்போது நாடு முழுவதும் வன்முறை ஏற்பட்டது. பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு இம்ரான் கான் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.