பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 504 பேர் கொரோனாவுக்கு பலி
By: Karunakaran Thu, 10 Sept 2020 09:30:29 AM
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் உள்ளன. லத்தின் அமெரிக்க நாடுகளில் அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளை கொண்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரேசிலில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. இதனால் அங்கு தினசரி கொரோனா உயிரிழப்பு 200 முதல் 400 வரை இருந்து வந்த நிலையில் நேற்று அது 500-ஐ கடந்ததுள்ளது. பிரேசிலில் கொரோனா மொத்த பாதிப்பு 41 லட்சத்து 62 ஆயிரத்து 73 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 504 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதால் அங்கு கொரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1,27,464 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 14,279 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் மொத்த பாதிப்பு 41 லட்சத்து 62 ஆயிரத்து 73 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.