சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 16 பேர் உயிரிழப்பு
By: Monisha Thu, 23 July 2020 12:06:50 PM
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 31 ஆயிரத்து 583 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 89 ஆயிரத்து 561 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,939 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒருவரும் , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.