சென்னையில் கொரோனாவுக்கு 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
By: Monisha Tue, 28 July 2020 10:19:21 AM
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாற்று பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக உள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 54 ஆயிரத்து 896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கொரோனாவில் இதுவரை மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 95 ஆயிரத்து 857 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 2,032 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரசு மருத்துவமனையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், தனியார் மருத்துவமனையில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.