இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
By: vaithegi Sun, 26 June 2022 12:31:55 PM
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 2-வது நாளாக குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,739 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளவில் 4,098, மகாராஷ்டிரத்தில் 1,728, தமிழ்நாட்டில் 1,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 23-ந் தேதி பாதிப்பு 13,313 ஆக இருந்தது. மறுநாள் 17,336 ஆக உயர்ந்தது. நேற்று 15,940 ஆக குறைந்த நிலையில் புதிய பாதிப்பு இன்று மேலும் குறைந்துள்ளது.
மேலும், நாட்டின் மொத்தபாதிப்பு 4 கோடியே 33 லட்சத்து 89 ஆயிரத்து 973 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை மொத்தம் 4 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரத்து 398 பேர் மீண்டுள்ளனர். இதில் நேற்று 10,917 பேர் அடங்குவர். தற்போதைய நிலவரப்படி 92,576 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 797 அதிகம் ஆகும்.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 10 மரணங்கள் மற்றும் நேற்று டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிரத்தில் 4 பேர் உள்பட மேலும் 25 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,24,999 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 12,72,739 டோஸ்களும், இதுவரை 197 கோடியே 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 4,53,940 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.