இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 977 பேர் மரணம்
By: Monisha Thu, 20 Aug 2020 10:29:11 AM
இந்தியாவில் இதுவரை 28 லட்சத்து 36 ஆயிரத்து 926 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் உலக அளவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 28,36,926 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 69,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 977 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53,866 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,37,871ல் இருந்து 20,96,665 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,86,395 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.9 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 73.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.