இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Thu, 30 July 2020 1:10:52 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவது சற்று ஆறுதல் அடைய செய்துள்ளது.
இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை நெருங்கியுள்ளதாகவும், மொத்தம் 15,83,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பினால் 775 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 10,20,582 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடைய 5,28,242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.