இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Thu, 13 Aug 2020 2:12:49 PM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்தாலும், கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டதாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில், இன்று 60 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 942 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 23,96,638 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16,95,982 குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் 47,033 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 6,53,622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் குணமடைந்தோர் சதவிகிதம் 70.77 ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.98 ஆகவும் உள்ளது.